போலீசாருக்கு வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் நீடிப்பு
போலீசாருக்கு வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் நீடிப்பு
ADDED : ஆக 17, 2026 06:10 AM

சென்னை: 'காவல் துறைக்கு, ஆட்கள் தேர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் காலிப் பணியிடங்கள் 10 ஆயிரத்திற்கு மேல் தாண்டி விட்டதால் போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் 'காவல் துறையில் பணிபுரியும் '௨ம் நிலை காவலர்கள் முதல், எஸ்.ஐ.,க்கள் வரையிலானவர்களுக்கு வார விடுமுறை தரப்படும்' என, 2021ல் அரசாணை வெளியிடப்பட்டது.
போலீசாருக்கு, சென்னை, திருச்சி, கோவை, மதுரை பெரு நகரங்களில், வார விடுமுறை தரப்பட்டாலும், மாவட்டங்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, வார விடுமுறை முடியாத காரியமாகி விட்டது.
இது தொடர்பாக, கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, 'போதிய காவலர்களின் எண்ணிக்கை இல்லாததால், அரசாணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது 'இந்த நடைமுறை சிக்கலை அரசாணை பிறப்பிக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும்' என நீதிமன்றம் தெரிவித்ததுடன் போலீசாருக்கு வார விடுமுறை தராததால், அவர்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவதால், அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் போலீசாருக்கு வார விடுமுறை தருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: காவல் துறையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. 2ம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை, 65,000 பேர் மட்டுமே, பணிபுரிந்து வருகின்றனர்.
காவல் துறைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால் எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து விட்டது. பல மாவட்டங்களில் போலீசாருக்கான வார விடுமுறை நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
