'மாஜி' கலால் அதிகாரி வீட்டில் ரூ.10 கோடி சொத்து பறிமுதல்
'மாஜி' கலால் அதிகாரி வீட்டில் ரூ.10 கோடி சொத்து பறிமுதல்
ADDED : அக் 15, 2025 11:35 PM

இந்துார்: மத்திய பிரதேசத்தில், மாவட்ட கலால் துறையின் முன்னாள் அதிகாரிக்கு சொந்தமான வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத, 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்ட கலால் துறை அதிகாரியாக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்றவர் தர்மேந்திரா சிங் பதோரியா. இவர் மீது, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, இந்துாரில் அவருக்கு சொந்தமான ஏழு இடங்கள் மற்றும் குவாலியரில் உள்ள ஒரு இடம் என மொத்தம் எட்டு இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
இதில், தர்மேந்திரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இந்துார், குவாலியர் மற்றும் உத்தர பிரதேசத்தின் எட்டாவா ஆகிய பகுதிகளில் கணக்கில் காட்டப்படாத 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதை கண்டறிந்தனர். இது தவிர, 1.05 கோடி ரொக்கம், 1.50 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ஒரு கிலோ எடையிலான தங்க நகைகள், நான்கு சொகுசு கார்கள் உள்ளிட்டவை அடக்கம்.
இதற்கிடையே பதோரியாவின் குடும்பத்தினர் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.