ஜாதி வாரி இடஒதுக்கீட்டுக்கு எதிராக டில்லியில் போராட்டம்
ஜாதி வாரி இடஒதுக்கீட்டுக்கு எதிராக டில்லியில் போராட்டம்
ADDED : ஆக 22, 2026 04:06 PM

புதுடில்லி: டில்லியில் ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், டில்லி ஜந்தர் மந்தரில் ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் வெடித்தது. இடஒதுக்கீட்டு மறுசீரமைப்பு இயக்கத்தின் தலைவர் ஹர்ஷ் துபே தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெனரல் சேனா, சாணக்கிய சேனா, கர்னி சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது, ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், யுஜிசி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு கோஷமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகைகள் போன்ற உதவிகள் சென்றடைய வேண்டும். ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டு முறை பல ஆண்டுகளுககு முன்பாக கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சமூகம் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தலைநகர் டில்லியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
