கர்நாடக கவர்னருக்காக போக்குவரத்து நிறுத்தம் எதிர்த்து போராடியவரால் பரபரப்பு
கர்நாடக கவர்னருக்காக போக்குவரத்து நிறுத்தம் எதிர்த்து போராடியவரால் பரபரப்பு
ADDED : ஜூன் 02, 2026 02:02 AM

பெங்களூரு: கர்நாடகாவில், கவர்னர் செல்வதற்கு வசதியாக, அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற் பட்டது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று காலை மங்களூ ரில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து லோக்பவன் வரை கவர்னர் கார் அணிவகுப்பு, எந்த தடையும் இன்றி செல்வதற்கு வசதியாக, 'ஜீரோ டிராபிக்' முறை செயல்படுத்தப் பட்டது.
இதனால், பழைய விமான நிலைய சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைத்தனர்.
இதனால், விரக்தியடைந்த ஒருவர், தன் காரில் இருந்து இறங்கி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
பாதுகாப்பு போலீசார் அங்கு வந்து, அந்த நபரை எழுந்து செல்லும்படி கூறினர்.
அந் த நபர், 'கவர்னர் மட்டும் தான் வி.ஐ.பி.,யா, நானும் வி.ஐ.பி., தான்; கவர்னர் விமானம் தரையிறங்குவதற்கு முன்பே, ஜீரோ டிராபிக்கை செயல்படுத்தி வாகனங்களை நிறுத்தி வைப்பது ஏன்? என் மனைவி கர்ப்பிணி.
'அவர் காருக்குள் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு ?' என, கேள்வி எழுப்பினார்.
அப்போது, துாரத்தில் கவர்னர் கார் அணிவகுப்பு வருவதை கவனித்த போலீசார், அந்த நபரை சமாதானம் செய்து சாலையில் இருந்து எழுப்பி அழைத்து சென்றனர்.
'இனி இதுபோன்று செய்யக் கூடாது' என, எச்சரித்து அனுப்பினர்.
இந்த சம்பவத்தை, அங்கிருந்த வாகன ஓட்டிகள் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, போராட்டம் நடத்திய நபருக்கு ஆதரவாக சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
