பி.எஸ்.எல்.வி.சி., - சி62 ராக்கெட்: 12ல் விண்ணில் பாய்கிறது
பி.எஸ்.எல்.வி.சி., - சி62 ராக்கெட்: 12ல் விண்ணில் பாய்கிறது
ADDED : ஜன 09, 2026 12:40 AM

சென்னை: புவியை கண்காணிக்கும், இ.ஓ.எஸ்., - என்1 உட்பட, 18 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட், ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, வரும் 12ம் தேதி விண்ணில் பாய்கிறது.
நம் நாட்டின் தகவல் தொடர்பு, பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக செயற்கைக்கோளை உருவாக்கி, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
இது தவிர, வணிக ரீதியாக தனியார் நிறுவனங்களின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்துகிறது.
ஏவுதளம் தற்போது, புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - என்1 செயற்கைக்கோள் உட்பட 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, வரும் 12ம் தேதி காலை 10:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இதில், சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் 'ஆயுள்சாட்' செயற்கைக்கோளும் ஒன்று. இந்நிறுவனம், புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் தீர்வுகளுடன், விண்வெளியில் எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து, 'ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி சக்தி குமார் கூறியதாவது:
செயற்கைக்கோளில் உள்ள கேமரா, ரேடார் உள்ளிட்ட சாதனங்கள் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கினாலும், செயற்கைக்கோளை சுற்று வட்டப் பாதையில் தொடர்ந்து நிலைநிறுத்த எரிபொருள் அவசியம்.
எனவே, ஒரு செயற்கைக்கோளில் இருந்து, மற்றொரு செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான சோதனைக்காக, ஆயுள்சாட் என்ற செயற்கைக்கோளை உருவாக்கி இருக்கிறோம்.
வெப்பநிலை இந்த செயற்கைக்கோளுக்குள் இரு டேங்குகள் உள்ளன. ஒன்றில் எரிபொருள் நிரப்பப்பட்டு இருக்கும்.
அதில் உள்ள எரிபொருள், மற்றொரு காலி டேங்கில் நிரப்பப்படும். விண்வெளியில் நிலவும் தட்ப வெப்பநிலை, டேங்கின் அழுத்தம் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எரிபொருள் மீண்டும் மீண்டும் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

