அனைத்து பழைய ரயில் பெட்டிகளையும் புதிதாக மாற்ற ரயில்வே இலக்கு
அனைத்து பழைய ரயில் பெட்டிகளையும் புதிதாக மாற்ற ரயில்வே இலக்கு
ADDED : செப் 02, 2026 02:42 AM

சென்னை: தற்போதுள்ள 25 சதவீத பழைய ரயில் பெட்டிகளை, வரும் 2028 மார்ச்சுக்குள் புதிதாக மாற்ற, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் இயக்கப்படும் விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது; சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் உட்பட பல்வேறு வசதிகள் இருக்கும்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் விபத்துகளின்போது, பயணியர் உயிரை காப்பதில், எல்.எச்.பி., வகை பெட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த நவீன பெட்டிகள், பழைய ஐ.சி.எப்., வகை பெட்டிகளை விட, பன்மடங்கு பாதுகாப்பு மிக்கவை.
சென்னை கவரப்பேட்டை ரயில் விபத்தின்போது, பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், இந்த எல்.எச்.பி., பெட்டிகளால் பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்டு ரயில் தடம் புரளும்போது, பெட்டிகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறி நசுங்காமல், தனியாக பிரிந்து தரையோடு தங்கி விடும். இது தான் இந்த பெட்டியின் தனி சிறப்பு.
தற்போது, நாடு முழுதும் 75 சதவீத ரயில்களில் இந்த வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள, 25 சதவீத ரயில்களிலும், பழைய ஐ.சி.எப்., பெட்டிகளை, வரும் 2028ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
