வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு: 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில் கி.மீ.,க்கு 2 பைசா அதிகரிப்பு
வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு: 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில் கி.மீ.,க்கு 2 பைசா அதிகரிப்பு
ADDED : டிச 22, 2025 01:55 AM

சென்னை: 'விரைவு ரயில்களில், 215 கி.மீ., துாரத்துக்கு மேல், 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு, வரும் 26 முதல் அமலுக்கு வரும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வேயில் நாடு முழுதும் உள்ள 19 மண்டலங்களில், 12,617 பயணியர் ரயில்கள், 11,700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 2.40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வேயின் சராசரி வருவாயில், சரக்கு பிரிவில் மட்டும் 70 சதவீதம் வரை கிடைக்கிறது.
புதிய ரயில் பாதை, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில் பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 'கவச்' தொழில்நுட்பம் அறிமுகம் போன்ற திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரயில் கட்டணம், வரும் 26 முதல் சிறிய அளவில் உயர்த்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில், ரயில்வே தொழிலாளர்களின் சம்பளம் 1.15 லட்சம் கோடி ரூபாய், ஓய்வூதியம் 60,000 கோடி ரூபாய், ரயில்களை இயக்குவதற்கான செலவு 2.63 லட்சம் கோடி ரூபாய். அதனால், சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வு, வரும் 26 முதல் அமல்படுத்தப்படும்.
அதன்படி, 215 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்வோருக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, சாதாரண வகுப்பில் 215 கி.மீ., வரை பயணம் செய்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. அதற்கு மேல் பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயரும். அதேபோல, மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, கி.மீ.,க்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். சரக்கு ரயில் இயக்கப் பிரிவில், ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, சரக்கு ரயில்கள் இயக்கத்தில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்திய ரயில்வே உள்ளது; தொலைநோக்கு திட்டங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சீசன் டிக்கெட்:
மும்பை, சென்னை, டில்லி, கொல்கட்டா நகரங்களில், புறநகர் ரயில் போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது. மொத்தமுள்ள ரயில் பயணியரில் 54 சதவீதம் பேர், மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த பிரிவு பயணியருக்கு, புறநகர் மின்சார ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதுபோல, சீசன் கட்டணம், நடைமேடை கட்டணமும் உயர்த்தப்படவில்லை.

