லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்
UPDATED : ஜன 05, 2026 06:44 AM
ADDED : ஜன 05, 2026 03:12 AM

ராமநாதபுரம்: தமிழகத்தில், லஞ்ச வழக்குகள் பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் தொடர்ந்து இரு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும், பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும், லஞ்சம் பெறுவது குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் முழுதும் 2025ல் 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோல, மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், கோவையில், 52 வழக்குகளும், மதுரையில், 44 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் கேட்ட, 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என, 22 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
தமிழகம் முழுதும், 2024ம் ஆண்டில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்தது. அதேபோல, 2025ம் ஆண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம், 24 வழக்குகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது.

