டில்லி குண்டுவெடிப்பில் அம்பலமான 'ஒயிட் காலர்' பயங்கரவாதம்: உலகம் முழுவதும் பரவிய நெட்வொர்க்
டில்லி குண்டுவெடிப்பில் அம்பலமான 'ஒயிட் காலர்' பயங்கரவாதம்: உலகம் முழுவதும் பரவிய நெட்வொர்க்
ADDED : நவ 11, 2025 06:49 PM

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் உயர் படிப்பு படித்த மருத்துவர்கள் என்பதன் மூலம், வெள்ளை காலர் (White Collor) பயங்கரவாதம் என்ற புதிய பாணியை பயங்கரவாத இயக்கங்கள் கையாண்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்கமான குண்டுவெடிப்பு என்று எப்போதும் போல விசாரணையை துவக்கி விட முடியாது என்பதை உணர்த்தி இருக்கிறது டில்லி கார் குண்டுவெடிப்பு. பொதுவாக பயங்கரவாத இயக்கங்கள், பயங்கரவாதிகள் என்பவர்கள் படித்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்பது பலரின் எண்ணம். இதற்கு உலகம் முழுவதும் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத சம்பவங்களே அதன் சாட்சியாக உள்ளன.
இத்தகைய பாணியை புறந்தள்ளி, வெள்ளை காலர் பயங்கரவாதம் (White Collor Terrorissm) என்ற புதிய வழியை பயங்கரவாத இயக்கங்கள் கையாள ஆரம்பித்து இருக்கின்றன. இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக புலனாய்வு அமைப்புகளால் பார்க்கப்படுவது தான் டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள். அதிலும் உயர்படிப்பான எம்.டி படிப்பை முடித்து, அரசு மருத்துவமனையில் அனைவரும் அறியும் வண்ணம் எளிமையாக பழகும் வகையில் தோற்றமளித்த அரசு மருத்துவர்கள். டில்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு 'ஒயிட் காலர்' பயங்கரவாதம் என்ற நுட்பமான பின்னணியை கொண்டு இருக்கிறது.
கிராம பகுதிகளில் மத பிரசாரகர்கள் என்ற அடையாளம், நகர் பகுதிகளில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்து சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர்கள் என பயங்கரவாதம் வேறு ஒரு ரூபத்தில் உலவி இருக்கிறது.
இவர்களின் நிழல், பள்ளி வகுப்பறைகள், மருத்துவமனைகள், பெருநிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், சிறப்புமிக்க பல்கலைகள், அரசு உத்தியோகத்தில் இருத்தல் என சிக்கலான நெட்வொர்க்குடன் தொடர்பு உடையதாக இருக்கிறது.
இவர்கள் ஆயுதங்களால், பயங்கரவாத முழக்கங்களை எழுப்பாமல், மவுனியாக இருந்து கொண்டே படித்து, நன்றாக உயர் பதவியில் இருந்தபடியே நிழல் உலக நிதி உதவி மூலமாக பயங்கரவாத செயல்களுக்காக கச்சிதமாக அறுவடை செய்யப்பட்டவர்கள்.
இந்த ஒயிட் காலர் பயங்கரவாதம் இந்தியாவுக்கு வெளியே பழையது, இங்கு புதியது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது;
9/11 கடத்தல் சம்பவத்தில் உயர்கல்வி படித்தவர்கள் பங்கு அதிகம். வெளிநாட்டில் படித்து, அங்கேயே வாழ்ந்தவர்கள். முன்னணி கடத்தல்காரனான முகமது அட்டா, கெய்ரோ பல்கலையில் கட்டிடக்கலை மற்றும் நகர்ப்பு திட்டமிடல் படிப்பை படித்தவன். அதன் பின்னர் ஹாம்பர்க்கில் நகர்ப்புற வடிவமைப்புத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவன்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கமானது, இங்கிலாந்து, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ மாணவர்கள், இளம் மருத்துவர்களை வெற்றிகரமாக ஆள்சேர்ப்பு பணியில் சேர்த்ததை அறிய முடிகிறது. இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை அரங்கேற்றியவர்கள் மிகவும், பணக்கார,வசதியான வணிக குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி இஸ்லாமிய ஆய்வு படிப்பில் முனைவர் (PhD) பட்டம் பெற்றவன். கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர்கள் எல்லோரும் உலகம் தேடிய கொடூர பயங்கரவாதிகள்.
அந்த வகையில், தற்போதைய டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அனைவரும் மருத்துவர்களாக உள்ளனர். இந்த சம்பவத்தின் தொடர் விசாரணையில் ஷாஹீன் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவில் அதுவும் தலைநகர் டில்லியில் இது போன்ற ஒயிட் காலர் பயங்கரவாதம் புதியது. இது ஒரு பெரும் அபாயத்தை குறிப்பதாக உள்ளது.
இவ்வாறு ஓய்வு பெற்ற அந்த காவல் துறை உயரதிகாரி கூறினார்.

