ADDED : ஆக 28, 2026 07:30 PM

அவிநாசி: அவிநாசி அருகே மின் இணைப்பு கட்டண முறையை மாற்றி அமைக்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தெக்கலுாரைச் சேர்ந்த பிரகாஷ், லேசர் கட்டிங் மற்றும் டிசைனிங் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மின் இணைப்புக்கான கட்டண முறையை மாற்றி அமைக்க, தெக்கலுார் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்து, 33, ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே, 5 ஆயிரம் ரூபாய் வழங்கிய நிலையில், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியாமல் பிரகாஷ், திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை இன்று இசக்கிமுத்துவிடம் பிரகாஷ் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இசக்கிமுத்துவை கைது செய்தனர்.
பிரகாஷ் கூறுகையில், ''கட்டண முறையை மாற்ற விண்ணப்பித்தபோதே லஞ்சம் கேட்டனர். பணம் கொடுத்த பின்னரும், ஆறு மாதங்களாக பல்வேறு காரணங்களைக் கூறி அலைக்கழித்தனர். மீண்டும் கூடுதலாக பணம் கேட்டதால், மனம் வெறுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தேன்,'' என்றார்.
