ரூ.2,000 லஞ்சம் வாங்கும் சர்வேயர் வீடியோவால் 'ஷாக்'
ரூ.2,000 லஞ்சம் வாங்கும் சர்வேயர் வீடியோவால் 'ஷாக்'
ADDED : ஆக 21, 2026 07:44 PM

புதுக்கோட்டை: புத்தாம்பூர் அருகே, விவசாயி உருமையா, 47, என்பவரிடம், சர்வேயர் எழில்கொடி, 35, லஞ்சம் வாங்கும் வீடியோ பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உருமையா. இவர், தன் மனைவி பவித்ரா பெயரில் உள்ள இடத்தை, பட்டாவில் உட்பிரிவு செய்ய, புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அணுகியுள்ளார்.
அதன்படி, ஒரு மாதம் முன், சம்பந்தப்பட்ட இடத்தை தன் உதவியாளருடன் பார்வையிட்ட எழில்கொடி, 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வீடியோ தற்போது பரவி வருகிறது.
வீடியோவில், உருமையா, 'நான் ஏற்கனவே முன் பணமாக, 2,000 ரூபாய் கொடுத்துள்ளேன். விரைவாக வேலையை முடித்து கொடுங்கள். இப்போது எவ்வளவு வேண்டும்' என, கேட்கிறார். அதற்கு, எழில்கொடி, 'நீங்களே பார்த்து கொடுங்கள்' என்கிறார்.
அதன் பின், அவர், 1,000 ரூபாய் கொடுக்கிறார். 'மேலும், 1,000 ரூபாய் கொடுங்கள்' என, எழில்கொடி கேட்டு, 2,000 ரூபாய் வாங்கும் காட்சி, அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
