ரஷ்ய ட்ரோன்கள் எந்த நேரத்திலும் எந்த ஐரோப்பிய நாட்டையும் தாக்கக்கூடும்; எச்சரிக்கிறார் ஜெலன்ஸ்கி
ரஷ்ய ட்ரோன்கள் எந்த நேரத்திலும் எந்த ஐரோப்பிய நாட்டையும் தாக்கக்கூடும்; எச்சரிக்கிறார் ஜெலன்ஸ்கி
ADDED : அக் 02, 2025 07:33 PM

கீவ்: “ரஷ்ய ட்ரோன்கள் எந்த நேரத்திலும் எந்த ஐரோப்பிய நாட்டையும் தாக்கக்கூடும்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கோபன்ஹேகனில் நடந்த ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: எங்கும் வான்வெளியில் அத்துமீறி ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்துகிறது. போலந்துக்கு எதிராக ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த துணிந்த ரஷ்யா, எந்த நேரத்திலும், எந்த ஐரோப்பிய நாட்டையும் தாக்கக் கூடும். மாஸ்கோ உடனான பதட்டங்கள் அதிகரிக்கும் போது எந்த நாடும் பாதுகாப்பாக இல்லை.
நடந்து வரும் உக்ரைன் மோதலுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.எதிரி ட்ரோன்களை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்த பாதுகாப்புப் படைகள் நமக்கு தேவைப்படும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஆபத்தை ஏற்படுத்தும்!
இது தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியதாவது: தெளிவான நிலைப்பாட்டை நாம் கொண்டிருக்க வேண்டும். இது மிகவும் அவசியம். ஐரோப்பிய நாட்டில் அத்துமீறி நுழையும் ட்ரோன்கள் ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.