அடுத்தடுத்த எண்களுக்கு ஒரே மாதிரி மதிப்பெண்; உதவி பேராசிரியர் தேர்வில் புதிய சர்ச்சை
அடுத்தடுத்த எண்களுக்கு ஒரே மாதிரி மதிப்பெண்; உதவி பேராசிரியர் தேர்வில் புதிய சர்ச்சை
ADDED : ஜூலை 02, 2026 05:52 AM

கோவை: உதவி பேராசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., நடத்திய தேர்வில், அடுத்தடுத்த பதிவு எண்களைக் கொண்ட தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூன் 25ல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில், முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்ற சிலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்யம் மதிப்பெண்; முதல் தாளில் குறைந்த மதிப்பெண் பெற்ற சிலருக்கு 50 மதிப்பெண் வழங்கப்பட்டதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், அடுத்தடுத்த பதிவு எண்களைக் கொண்ட தேர்வர்களுக்கும், ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக தேர்வர்கள் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக சமூகப் பணி பாடப்பிரிவு டி.ஆர்.பி., உதவி பேராசிரியர் தேர்வில் சேர்க்கப்பட்டது. சமூகப் பணி தேர்வு முடிவுகளை பதிவு எண் வாரியாக ஆய்வு செய்தபோது, தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, தேர்ச்சி பெறாதவர்களின் அடுத்தடுத்த பதிவு எண்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
மேலும், முதல் தாளில் ஒரே மதிப்பெண் பெற்ற சிலருக்கு, இரண்டாம் தாளிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகவும் கண்டறிந்தோம். இதனால், இரண்டாம் தாள் விடைத்தாள்களை முறையாக மதிப்பீடு செய்யாமல், முதல் தாள் மதிப்பெண் அடிப்படையாகக் கொண்டு தோராயமாக மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஒவ்வொரு விடைத்தாளும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால், இவ்வாறு ஒரே மாதிரியான மதிப்பெண் தொடர்ந்து வருவது இயல்பானதாக இருக்காது. எனவே, 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மதிப்பெண் வழங்கும் நடைமுறை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
