அதிமுக கோஷ்டிகள் சபாநாயகரிடம் மனு; தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
அதிமுக கோஷ்டிகள் சபாநாயகரிடம் மனு; தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
UPDATED : மே 14, 2026 11:57 AM
ADDED : மே 14, 2026 10:35 AM

சென்னை: அதிமுகவில் தற்போது கோஷ்டி பூசல் நிலவி வரும் நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. இதற்கிடையே, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் இருவரும் புகார் மனு அளித்தனர்.
சட்டசபை தேர்தலில், 107 எம்.எல்.ஏ.,க்களை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின், 13 இடங்களையும் சேர்த்து, 120 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், அ.தி.மு.க., பிளவுபட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பை சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக நேற்று ஓட்டளித்தனர்.
த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த, வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட, 25 பேரை, அ.தி.மு.க., மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, இபிஎஸ் நீக்கினார். தன் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிருப்தி கோஷ்டி எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ்யின் இந்த நடவடிக்கை மேலும் பிளவை அதிகரித்தது. இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி உள்ளது.
அதிமுகவில் இரண்டு தரப்பினர் மாறி மாறி நிருபர்கள் சந்திப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால், அக்கட்சி இரண்டாக உடைந்தது என்பது நிரூபணம் ஆனது.கோஷ்டி பூசல் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகளை நடத்திய பிறகே அலுவலகத்திற்கு வருபவர்களை போலீசார் அனுமதிக்கின்றனர். கட்சிக்குள் உட்கட்சி பிரச்னை வெடித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
