வெளிமாநில தொழிலாளர்கள் பற்றாக்குறை: தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு
வெளிமாநில தொழிலாளர்கள் பற்றாக்குறை: தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2026 04:41 AM

சென்னை: 'சட்டசபை தேர்தலுக்காக சென்ற, மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் திரும்பி வராததால், தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன' என, கட்டுமான துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கட்டுமான பணிகளில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும், வெளி மாநில தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது.
உத்தர பிரதேசம், பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வருகின்றனர். தமிழகத்தில் கட்டுமானம், உற்பத்தி, ஜவுளி மற்றும் சேவை துறைகளில், இவர்கள் பணிபுரிகின்றனர்.
பெரும் சர்ச்சை தமிழக அரசு புள்ளி விபரங்களின்படி, 35 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. 2020ல் கொரோனா பரவல் காலத்தில், வெளிமாநில தொழிலாளர்கள், அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின், அவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த தொடங்கின.
தமிழகத்தில், வெளி மாநில தொழிலாளர்களை சமூக பாதுகாப்பு திட்டங்களில், பயனாளிகளாக சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவமும் அதிகரித்தது.
இதையடுத்து, சில ஆண்டுகளாக, தமிழகத்திற்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
ஆனால், தற்போது, வெளிமாநில தொழிலாளர்கள் கிடைப்பதில் திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குவங்க தொழிலாளர்களில், பெரும்பாலானோர் திரும்பி சென்று விட்டதால், பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திரும்பவில்லை இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின், தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
கட்டுமான பணிகளில், குறிப்பிட்ட திட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்களை பயன்படுத்தும் போது, அனைவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.
அதன்படி, மேற்கு வங்க பணியாளர்கள், சில கட்டுமான திட்டங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் ஓட்டு போட எனக்கூறி, பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர். அதன்பின், பக்ரீத் பண்டிகையின் போதும், ஏராளமான தொழிலாளர்கள் சென்றனர்.
அவர்கள் யாரும் திரும்பி வரவில்லை. இதனால், அவர்கள் தொடர்பான கட்டுமான திட்டங்களில் பணிகள் முடங்கியுள்ளன.
அதனால், ஒடிஷா, பீஹார் மாநிலங்களில் இருந்து, புதிதாக பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் கட்டுமான திட்ட ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது, கட்டுமான துறையில், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
