பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு 'கிடுக்கிப்பிடி'
பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு 'கிடுக்கிப்பிடி'
ADDED : செப் 25, 2025 03:52 PM

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இணைய உலகம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைகிறதோ அந்தளவிற்கு இணைய குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவரின் அடையாளங்களை அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சில சமூக வலைதளங்கள் வாயிலாக தொடரும் இவ்வகை மோசடியை அந்தந்த வலைதள நிறுவனங்களும் தடுக்க முயற்சிக்கின்றன.
உத்தரவு
அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சமூக வலைதளத்தில் போலியாக அக்கவுண்ட் உருவாக்கி, அதனை வைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் பெயர்களில் போலி கணக்குகள், விளம்பரங்கள், பக்கங்கள் போன்ற மோசடிகளை கட்டுப்படுத்த மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், ஆள்மாறாட்டத்தை தடுக்க முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. செப்.,30க்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலர் (776,400 அமெரிக்க டாலர் - இந்திய மதிப்பில் ரூ.6.88 கோடி) அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் மோசடி தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
முடக்கம்
ஜூன் 2024 மற்றும் ஜூன் 2025 க்கு இடைப்பட்ட ஓராண்டில் பேஸ்புக்கில் முக்கிய அரசு அதிகாரிகளின் வீடியோக்கள், படங்களை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகமும், காவல்துறையும் தெரிவித்துள்ளது. அந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 2000 மோசடி விளம்பரங்கள் மற்றும் மோசடியாளர்களை காவல் அதிகாரிகள் முடக்கியுள்ளனராம்.
இது குறித்து உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், ''இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்ற மோசடியாளர்கள் பேஸ்புக்கை தான் முதன்மை தளமாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுப்பதும், பொதுமக்களை பாதுகாப்பதும், பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துவதும் எங்கள் அரசுக்கு மிகவும் முக்கியம். உலகளவில் ஆள்மாறாட்ட மோசடிகளின் அபாயத்தை தடுக்க மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், சிங்கப்பூரில் மோசடிகள் அதிகம் நடப்பது கவலையளிக்கிறது. எனவேதான் மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது'' என்றனர்.