UPDATED : ஜூன் 26, 2026 12:19 PM
ADDED : ஜூன் 26, 2026 12:06 PM

சென்னை: சென்னையில் இன்று நடந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் வரவில்லை. தான் மதிமுகவில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவை தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உயர்நிலை குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் வரவில்லை.
அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நாளை (ஜூன் 27) நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்பது குறித்து பொதுக்குழுவில் நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தவெக ஆதரவு மனநிலையில் இருக்கும் மதிமுக தலைமை, விரைவில் அந்த கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற தன் இரு எம்எல்ஏ.,க்களையும் ராஜினாமா செய்யும்படி தலைமை வற்புறுத்தியுள்ளது.
அதை ஒருவர் ஏற்றுக் கொண்டதாகவும், இன்னொருவர் ஏற்க மறுத்து விட்டதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜினாமா செய்யும் முடிவை ஏற்க மறுத்த செந்தில் செல்வன், மதிமுக கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மதிமுக உயர் நிலை கூட்டம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
