கடைசி நிமிட மேஜிக்.. வெளியேறியது தென்னாப்பிரிக்கா; கனடா சாதனை வெற்றி!
கடைசி நிமிட மேஜிக்.. வெளியேறியது தென்னாப்பிரிக்கா; கனடா சாதனை வெற்றி!
ADDED : ஜூன் 29, 2026 09:39 AM

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் (ரவுண்ட் ஆப் 32), தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கனடா அணி திரில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட கோல், கனடாவின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
விறுவிறுப்பான மோதல்:
நாக் அவுட் சுற்றான 'ரவுண்ட் ஆப் 32' சுற்றின் முதல் போட்டியில், கனடா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் களம் கண்டன. இரு அணிகளுமே தங்களது வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் விளையாடியதால், ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அனல் பறந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் கனடா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 44வது நிமிடத்தில் கனடாவின் மொய்சே பொம்பிம்போ தலையால் முட்டிய பந்தை, தென்னாப்பிரிக்க வீரர் மொகோய்னா கோல் லைனிலேயே தடுத்து நிறுத்தினார். அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை தென்னாப்பிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் சாதுரியமாக தடுத்து அரணாக நின்றார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கம்பேக் கொடுத்த கேப்டன்:
இரண்டாவது பாதியிலும் ஆட்டம் பரபரப்பாகவே நகர்ந்தது. 75வது நிமிடத்தில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கனடா அணியின் கேப்டன் அல்போன்சோ டேவிஸ் மாற்று வீரராக களம் புகுந்தார். அவர் வந்த உடனே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார்.
தென்னாப்பிரிக்காவின் சோகம்:
ஆட்டம் சமனில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில்(92வது நிமிடம்) கனடா 'மேஜிக்' நிகழ்த்தியது. கனடாவின் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ, தொலைவிலிருந்து மின்னல் வேகத்தில் பந்தை கோல் போஸ்ட்டிற்குள் அடிக்க மைதானம் அதிர்ந்தது.
இறுதியில், 1-0 என்ற கணக்கில் கனடா அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து அடுத்த சுற்றான 'ரவுண்ட் ஆப் 16'க்கு தகுதி பெற்றது. ஹூஸ்டனில் நடக்கவுள்ள அடுத்த சுற்றில் மொராக்கோ அல்லது நெதர்லாந்து அணியை கனடா எதிர்கொள்ளும்.
