ADDED : ஜன 15, 2026 06:34 AM

மாட்ரிட்: ஸ்பெயினில், 150 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், அரியணையை அலங்கரித்து, ராணி ஆட்சி புரிய உள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினை, மன்னர் ஆறாம் பெலிப், 57, ஆண்டு வருகிறார். மன்னர் பெலிப் - ராணி லெடிசியா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான லியோனார், 20, ராணியாக விரைவில் அரியணை ஏற இருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு மன்னர் பெலிப் பதவியேற்றபோதே, லியோனார் அதிகாரப்பூர்வமாக அஸ்டூரியாஸ் இளவரசி, ஜிரோனா இளவரசி, வியானா இளவரசி போன்ற பட்டங்களைப் பெற்றார்.
இவை ஸ்பெயின் வாரிசு இளவரசர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய பட்டங்கள் ஆகும். ஸ்பெயின் மன்னர்கள் நாட்டின் தலைமை தளபதியாக இருப்பதால், வாரிசுகள் ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டும்.
இதற்காக லியோனார் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பயிற்சி எடுத்துள்ளார். ஸ்பானிஷ், கேடலான், ஆங்கிலம் உட்பட 8 மொழிகள் வரை பயின்றுள்ளார்.
ஸ்பெயினில் கடைசியாக தன்னிச்சையாக ஆட்சி செய்த ராணி, இரண்டாம் இசபெல்லா ஆவார். அவர் 1833 முதல் 1868 வரை ஆட்சி செய்தார். அதன்பின், மன்னர்களே ஆட்சி புரிந்து வந்தனர்.
மன்னர் ஆறாம் பெலிப் மரணமடைந்தாலோ அல்லது அரசப் பதவியை துறந்தாலோ, இளவரசரி லியோனார் அரியணை ஏறுவார். அதற்கான அனைத்துப் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

