ADDED : மே 17, 2026 03:56 AM

சென்னை: தமிழக முதல்வராக பதவி யேற்ற விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம், அத்துறைகள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
சட்டம்- - ஒழுங்கு பாதிப்பு, மது போதை கலாசாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தான், தி.மு.க., தோற்க காரணம் என்று கூறப்படுகிறது. அதனால்தான் காவல் துறையுடன் பெண்கள், இளைஞர், குழந்தைகள் நலன் ஆகிய துறைகளை, முதல்வர் விஜய், தன் வசம் வைத்துக் கொண்டார்.
அதுமட்டுமல்லாது, மகளிர் உரிமைத்தொகை போன்று, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையையும் தன் பொறுப்பில் வைத்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில், த.வெ.க., மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நகர மக்களின் ஆதரவை தக்க வைக்க வேண்டுமானால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையையும், தன் வசம் வைத்துள்ளார்.
இது தவிர, சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, டாஸ்மாக், போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு, சிறப்பு அதிகாரிகளை நியமித்து, நேரடியாக கண்காணிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
