நாடு முழுதும் விரைவில் சிறப்பு தீவிர திருத்த பணி; டில்லியில் வரும் 10ல் முக்கிய ஆலோசனை
நாடு முழுதும் விரைவில் சிறப்பு தீவிர திருத்த பணி; டில்லியில் வரும் 10ல் முக்கிய ஆலோசனை
ADDED : செப் 07, 2025 02:44 AM

புதுடில்லி: நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, வரும் 10ம் தேதி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் டில்லியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள, கடந்த ஜூன் இறுதியில் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'சிறப்பு தீவிர திருத்தப் பணியால் தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுரிமை பறிக்கப்படும்' என, குற்றஞ்சாட்டின.
இதை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் கமிஷன், 'பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நோக்கம். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாட்டவரை நீக்குவதே குறிக்கோள்' என, விளக்கம் அளித்தது.
இதை ஏற்காத எதிர்க்கட்சிகள், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடின. தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம், ஆதார், ரேஷன் அட்டைகளை பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது.
இதன்படி, பீஹார் முழுதும் தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததும், வேறு மாநிலத்துக்கு நிரந்தரமாக குடியேறி, அங்கு வாக்காளர்களாக பதிவு செய்தவர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்ததும் தெரியவந்தது.
இதன்படி பீஹாரில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், ஆக., 1ல் வெளியிடப்பட்டது. பெயர் விடுபட்டவர்கள், வரும் 30 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், வரும் 10ம் தேதி டில்லியில் நடக்கிறது.
இதில் கட்டாயம் பங்கேற்கும்படி, அனைத்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அப்போது, மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது என்பது உள்ளிட்ட விபரங்களை தொகுத்து எடுத்து வரும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, சில கூடுதல் அம்சங்களை சேர்க்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் நாடு முழுதும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.