ADDED : டிச 08, 2025 06:34 AM

பாட்னா: பீஹாரில், ஏழுமலையான் கோவிலை கட்டுவதற்கு அம்மாநில அரசு, 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சமூக வலைதளத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு வெளியிட்ட பதிவு: பீஹார் தலைநகர் பாட்னாவில், ஏழுமலையான் கோவில் கட்ட அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மொகமா காஸ் பகுதியில், 10.11 ஏக்கர் நிலத்தை, ஆண்டுக்கு 1 ரூபாய் என, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டதற்கு நன்றி. இதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநில அமைச்சர் ஸ்ரீ நாரா லோகேஷ் ஆகியோருக்கு நன்றி.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பரிந்துரை செய்த பீஹார் சுற்றுலா துறை மேம்பாட்டுக் கழக இயக்குநருக்கும் நன்றி. திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதிநிதிகள் விரைவில் ஆய்வு நடத்தி கோவில் கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பர். பீஹார் அரசின் ஒத்துழைப்புக்கு நன்றி. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

