ADDED : ஏப் 21, 2026 05:26 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள 75,000 தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுடன் அலைபேசி செயலி வழியே முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது: தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், ஓய்வின்றி உழைக்க வேண்டும், ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். தொகுதி மறுவரையறை சதியில், போராடி பெற்ற வெற்றி வெறும் டிரைலர்தான். இன்னும் பல போர்கள் நம் முன் இருக்கின்றன. சட்டசபையில் நாம் வலுவாக இருக்கும் வரை, டில்லியால் தமிழகத்தின் உரிமைகளை தொட முடியாது.
ஒவ்வொரு பாக முகவரும், அவரவர் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு, மீண்டும் ஒரு முறை நேரில் சென்று, ஓட்டு கேட்க வேண்டும். தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவான ஓட்டுகள், ஒன்று கூட விடுபடக் கூடாது. தன்னார்வ தொண்டர்களை தயாராக வைத்திருந்து, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், எளிதில் வந்து ஓட்டளிக்கும் வகையில், அழைத்து வர ஏற்பாடுகள் செய்வது, அந்தந்த ஓட்டுச்சாவடி முகவர்களின் பொறுப்பு.
எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில், முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம். விதி மீறலோ, முறைகேடோ நடந்தால், கட்டளை மையம் எண்ணை அழைத்து, புகார் அளிக்க வேண்டும். தேர்தலன்று, கடைசி ஓட்டு பதிவாகும் வரை, ஓட்டுச் சாவடியிலேயே இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வரும்போது ஓட்டுச்சாவடி வாரியாக, நாம் பெற்ற ஓட்டுகளை அலசி ஆராய்வேன். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக ஓட்டுகளை பெற்று தரும் ஓட்டுச்சாவடி முகவரை, நானே நேரில் சந்திப்பேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
