அழியும் நிலையில் அயிரை மீன்: கூடுதலாக வளர்க்க நடவடிக்கை
அழியும் நிலையில் அயிரை மீன்: கூடுதலாக வளர்க்க நடவடிக்கை
ADDED : அக் 12, 2025 12:32 AM

சென்னை: ''அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் அயிரை மீன், அழியும் நிலையில் உள்ளது. அதை தவிர்க்க, கூடுதலாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, அயிரை மீன் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
அயிரை மீன்கள், ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் வளரக்கூடியவை. இம்மீன்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. இவற்றை பாதுகாக்க, தேனி மாவட்டம், வைகை அணை அருகில், கடந்த ஆண்டு அயிரை மீன் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்பட்டது.
இம்மையத்தில், அயிரை மீன் குஞ்சு வளர்க்கப்பட்டு, மீன் வளர்ப்போருக்கு வினியோகிக்கப்படுகிறது.
மேலும், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு, நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மையங்களில் பயிற்சி பெற்றோர், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அயிரை மீன் வளர்ப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.
அயிரை மீன் வளர்ப்பிற்கு தேவையான குஞ்சுகள், இம்மையம் சார்பில் வினியோகிக்கப்படுகின்றன. அயிரை மீன், ஒரு சுவைமிக்க நன்னீர் மீன் இனம். அவை அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை.
சராசரியாக கிலோ, 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தற்போது, அயிரை மீன் வளர்க்க, மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.