அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: இந்த முறை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: இந்த முறை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
ADDED : நவ 06, 2025 06:23 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கல்வி சீர்திருத்தம், கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரில், பாகிஸ்தான் அரசின் தவறான நிர்வாகம், ரேஷனில் கோதுமை மற்றும் மின்சாரம் வழங்குவதில் குளறுபடி, ஆளும் கட்சியினருக்கு அதிகாரிகளின் வரம்பற்ற சலுகைகள் ஆகியவற்றை கண்டித்து, அங்கு வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் ஓய்ந்தது.
இந்நிலையில், அங்கு மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இந்த முறை, கல்வியில் சீர்திருத்தம், கல்வி மற்றும் மதிப்பீட்டு முறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாத துவக்கம் முதல் போராட்டம் அமைதியாக நடந்து வந்தது. ஆனால், முசாபராபாத் நகரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. சில இடங்களில் டயர்களை எரித்தும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷம் போட்டனர். இந்த போராட்டம் முதலில் முசாபராபாத் நகரில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து தான் துவங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு அரசியல்சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டும் கல்வி கட்டணமாக 3 அல்லது 4 மாதங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்களும் களத்தில் இறங்கினர். தற்போது மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் மாணவர்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அரசு கவிழ்ந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் மாணவர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

