ADDED : பிப் 22, 2026 12:16 AM

தமிழகத்தோடு, அசாமிலும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தற்போது, பா.ஜ.,வின் ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வராக உள்ளார். இவரும் முதலில் காங்கிரசில் இருந்தவர்தான்; ஆனால் ராகுலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.,வில் இணைந்தார்.
காங்., தேர்தல் பிரசாரத்திற்கு, மூன்று நாள் பயணமாக அசாம் செல்ல முடிவெடுத்தார் பிரியங்கா. அவர், அசாம் தலைநகர் குவஹாத்தி செல்லும் தினத்தன்று, அம்மாநில முன்னாள் காங்., தலைவர் புபேன் குமார் போரா, பா.ஜ.,விற்கு தாவிவிட்டார் என்ற செய்தி அவருக்கு- கிடைத்தது.
ஐந்து ஆண்டுகளாக காங்., தலைவராக இருந்த போரா, எட்டு மாதங்களுக்கு முன், காங்., தலைமையால் மாற்றப்பட்டார்; இவருக்கு பதிலாக, கவுரவ் கோகோய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றால் இவர்தான் முதல்வர். 'கிளம்பும் சமயத்தில் இதென்ன' என, பிரியங்கா வருத்தப்பட்டாலும், அசாம் சென்ற பின், பல இடங்களிலும் பிரசாரம் செய்தார்; இவருடன் அம்மாநில தேர்தல் பொறுப்பாளரும், -கர்நாடகா துணை முதல்வருமான சிவகுமார் சென்றார். செல்லும் இடங்களில் எல்லாம் பிரியங்காவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது; கூட்டமும் அதிகம். ஆனால், இந்த கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பதுதான் கேள்வி!
மூன்று நாள் பயணத்தை இரு நாட்களிலேயே முடித்துக் கொண்ட பிரியங்கா, உடனே டில்லி திரும்பவில்லை; தனி விமானம் வாயிலாக, அவருடைய தொகுதியான கேரளாவில் உள்ள வயநாடு சென்றார். தமிழகம் மற்றும் அசாம் உடன், கேரளாவும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது; அங்கும் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் பிரியங்கா.
இப்படி பரபரப்பாக கட்சி வேலைகளில் பிரியங்கா ஈடுபட்டு வருவது, தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 'இவர் இப்படி இயங்கிக்கொண்டிருக்க, இவரது சகோதரர் ராகுல், இந்த அளவிற்கு கட்சி வேலைகளைப் பார்ப்பதில்லையே' என்று தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர்.
'பிரியங்காவிற்கு கட்சியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்று கட்சியினர் அனைவரும் விரும்பினாலும், சோனியாவோ ராகுலுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்.

