70 ஆண்டு கால வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!
70 ஆண்டு கால வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!
ADDED : ஜூன் 28, 2026 01:13 AM

புதுடில்லி: உத்தரகண்டில், 70 ஆண்டுகளாக நீடித்த நிலத் தகராறு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் மூலம், நான்கு தலை முறைகளாக நடந்து வந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள நர்சிபூர் கலான் கிராமத்தை சேர்ந்தவர் சராபத் அலி.
ஆட்சேபனை
கடந்த 1957ல் இவரது முன்னோர்கள், கிராமத்தில் இருந்த 3.1 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, கிரைய பத்திரத்தில் பதிவு செய்தனர். அன்று முதல், அந்த நிலம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
கடந்த 1984ல் நிலத்தின் பட்டா மாற்றம் தொடர்பாக சராபத் அலியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்தபோது, நிலத்தை விற்றவர்களில் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார். எனினும், 1991ல் அந்த ஆட்சேபனையை அவர் திரும்ப பெற்றதால், பட்டா மாற்றம் மனுதாரர்களுக்கு சாதகமாக மாறியது.
அதே ஆண்டு நில ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் நடந்தபோதும், 3.1 ஏக்கர் நிலத்தின் மீதான சராபத் அலி குடும்பத்தின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது. எனினும், மற்ற நில உரிமையாளர்கள் திடீரென இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 1999ல் இந்த விவகாரத்தை ஆய்வு செய்த நில ஒருங்கிணைப்பு அதிகாரி, கடந்த 1957ம் ஆண்டின் நில கிரையப் பத்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும், 'அது, உத்தர பிரதேச ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் செல்லாததாகிவிட்டது' எனக்கூறி, நிலத்தின் மீதான மனுதாரர்களின் உரிமையை ரத்து செய்தார்.
இதையடுத்து மேல்முறையீட்டு ஆணையங்களும், அதன் பின் 2017ல் இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், 'ரத்து உத்தரவு சரி' என கூறி, மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இவ்வழக்கில் மேல்முறையீட்டு ஆணையங்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மாபெரும் தவறு
இரண்டு மிகச் சிறிய மற்றும் தவறான காரணங்களை அடிப்படையாக கொண்டு, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அதன் விபரம்: பத்திரம் எழுதப் பட்டபோது சாட்சியாக கையெழுத்திட்ட பாரு என்பவர், 1995ல் வாக்குமூலம் அளிக்கும்போது தான் நர்சிபூர் கலான் கிராமத்தில் வசிப்பதாக கூறினார். ஆனால், 1957 பத்திரத்தில், அவரது முகவரி நிஹந்த்பூர் சுதாரி என இருந்தது.
இந்த மிகச் சிறிய முகவரி முரண்பாட்டை காரணம் காட்டி, 70 ஆண்டு பழமையான பத்திர பதிவையே விசாரணை நீதிமன்றங்கள் செல்லாதது என அறிவித்தது மாபெரும் தவறு.
போலி பத்திரம் என்ற குற்றச்சாட்டு இல்லை. மிரட்டியோ அல்லது ஏமாற்றியோ நிலம் வாங்கப்பட்டதாக எதிர் தரப்பினர் எங்குமே வாதிடவில்லை. அப்படி இருக்கும்போது, சட்டப்பூர்வமாக பதியப்பட்ட ஒரு ஆவணத்தின் செல்லுபடி தன்மையை, அற்பமான காரணங்களுக்காக எப்படி நிராகரிக்க முடியும்.
கடந்த, 1957 முதல் மனுதாரர்களின் குடும்பம், அந்த நிலத்தில் பயிர் செய்து வருவதை எதிர்தரப்பு மறுக்கவில்லை. எனவே, 1957ம் ஆண்டின் கிரைய பத்திரம் செல்லும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண பட்டா மாற்றத்திற்காக தொடங்கிய இந்த நடைமுறை, ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டம் என பல வடிவங்களை எடுத்து, இறுதியில் விசாரணை நீதிமன்றங்களின் தவறான புரிதலால் வீண் அலைச்சலாகவும், ஏமாற்றமாகவும் முடிந்து இருக்கிறது என உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்து உள்ளது.
