கோவில்களில் சர்ப்ரைஸ் விசிட் தொடரும்; அமைச்சர் ரமேஷ்
கோவில்களில் சர்ப்ரைஸ் விசிட் தொடரும்; அமைச்சர் ரமேஷ்
UPDATED : ஜூன் 08, 2026 07:17 AM
ADDED : ஜூன் 08, 2026 06:50 AM

கோவை: ''கோவில்களில் சர்ப்ரைஸ் விசிட் தொடரும்; யாராக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில், இவர் கூறியதாவது: மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் கோவில்களில் நெரிசல் இல்லாமல் வழிபாடு நடத்த திட்டமிட்டு வருகிறோம். கால மாற்றத்துக்கு ஏற்ப, 'ஆன்லைன்'ல் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். நெரிசல் அதிகம் உள்ள கோவில்களில் மட்டும், முதற்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும். வெற்றிகரமாக செயல்படுத்திய பின், பிற கோவில்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
ஏழை, எளிய மக்கள் பயன்பெற கோவில்களிலேயே டோக்கன் வசதி செய்யப்படும். இதற்கான ஆய்வுகள் நடத்தி வருகிறோம். எண்ணிக்கையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு, கூட்ட மேலாண்மை செய்யப்படும். 'வாட்ஸ் ஆப்'பிலேயே பதிவு செய்ய முடியுமா என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்து சமய நிலையத்துறை நிர்வாகத்தில் என்ன முடிவு செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டிருக்கிறேன். அந்த பிரச்னை குறித்து ஆலோசித்து முதல்வர் முடிவு செய்வார்.
கோவில்களில் நடந்த முறைகேடுகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறேன். முறைகேடுகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தப்படும். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யானை புத்துணர்வு முகாம் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் சர்ப்ரைஸ் விசிட் தொடரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
