ADDED : மே 04, 2026 03:56 PM

சென்னை: நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை துவங்கியதில் இருந்து சில மாநாடு, சில பொதுக்கூட்டம் மட்டுமே நடைபெற்றது.
பிரசாரத்தின்போதும் அதிகளவில் வெளியே வரவில்லை விஜய். ஆனால், அவர் சில இடங்களில் அவர் ஹேஸ்யமாக சொன்ன சில விஷயங்கள் இந்த தேர்தலில் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மாநாட்டில் பேசிய விஜய், 'பொலிட்டிக்கல் பாம்' என்ற பெயரில் ''நம்மை நம்பியும் சிலர் வரலாம் இல்லையா, அவங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு தருவோம்'' என அறிவித்தார். தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து அவர் அப்படி பேசியிருந்தாலும், எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருப்பதால், தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்து ஆட்சி அமையும் என்றே தெரிகிறது. அப்படி தவெக ஆட்சியில் அமர உதவும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் விஜய் இடம்கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு மதுரையில் நடந்த 2வது மாநாட்டில், வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன் எனக்கூறி, ஒவ்வொரு தொகுதியாக வாசித்து அதில் அனைத்திலும் விஜய் என்ற தன் பெயரையே குறிப்பிட்டார். அதாவது, அனைத்து தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர், என்னை நினைத்தே வாக்களியுங்கள் எனக் கூறினார். அதன்படி, பெரும்பாலான தொகுதியில் கட்சி வேட்பாளர் பெயர் தெரிவதை விட, விஜய் கட்சி, விஜய் சின்னம் என்ற பிம்பமே மேலோங்கி இருந்தது. அதன் வெளிப்பாடே அதிக இடங்களில் தவெக வெற்றி முகத்தில் இருக்கிறது.
பிரசாரத்தின் இறுதி நாளில் நடந்த கூட்டத்தில், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் 'கடுப்பு கணிப்புகளை' வெளியிடுவதாக குற்றம்சாட்டி, அதனை பொய்யாக்கி தவெக ஆட்சியில் உட்காரும் எனப் பேசினார். அதன்படியே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும் என தெரிவித்த நிலையில், அதனை பொய்யாக்கி தவெக அதிக இடங்களில் வென்றுள்ளது.
''திமுக தொடர்ந்து இரு முறை ஆட்சிக்கு வருவது வரலாற்றிலேயே இல்லை'' என்றும் பிரசாரத்தின்போது பேசியிருந்தார் விஜய். அதன்படியே, கடந்த முறை வென்றிருந்த திமுக, இந்தமுறை தோல்வியடைந்துள்ளது.
இப்படி பேசும்போது விஜய் கூறிய சில விஷயங்கள் உண்மையில் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
