இறந்த ஊழியரிடம் லீவு லெட்டர் கேட்ட தைவான் விமான நிறுவனம்; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரியது
இறந்த ஊழியரிடம் லீவு லெட்டர் கேட்ட தைவான் விமான நிறுவனம்; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரியது
UPDATED : அக் 19, 2025 10:51 PM
ADDED : அக் 19, 2025 10:36 PM

தைபே: உயிரிழந்த ஊழியரிடம் லீவு லெட்டர் கேட்ட தைவான் விமான நிறுவனத்தின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தைவானைச் சேர்ந்த இவா ஏர் என்ற விமான நிறுவனத்தில் 34 வயதான சன் என்பவர் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த செப்., 24ம் தேதி தைவானில் இருந்து மிலான் நோக்கி சென்ற விமானத்தில் பணியில் இருந்த போது, திடீரென உடல்நலக்குறைவாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த அக்.,10ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவால் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்திருந்த போது, விமான நிறுவனத்தின் அதிகாரி, விடுப்பு ஆவணங்களை அனுப்புமாறு சன்னின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். சன்னின் இறுதிச்சடங்கு நாளில் இந்த செய்தியை பார்த்த அவரது குடும்பத்தினர், இறப்பு சான்றிதழை அனுப்பியுள்ளனர். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தங்களின் ஊழியரின் செயலுக்கு இவா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இவா விமான நிறுவனத்தின் தலைவர் சன் சியாமிங் கூறுகையில்,'இந்த சம்பவம் எங்கள் இதயத்தில் வலியை எப்போதும் வலியை ஏற்படுத்தும். சன்னின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.