10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் தமிழகத்தின் வளர்ச்சி; எச்சரிக்கிறார் அண்ணாமலை
10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் தமிழகத்தின் வளர்ச்சி; எச்சரிக்கிறார் அண்ணாமலை
ADDED : ஆக 24, 2026 01:38 PM

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய், சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என்று 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார். சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கு மாற்று இடம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். புதிய விமான நிலையம் அமையும் இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், தமிழகத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. எனவே, மாற்று இடத்தை முன்பே பரிந்துரைத்திருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு நிர்வாக முடிவு எடுத்தாலும் கூட, ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, மத்திய அரசிடமும், சட்டப்பூர்வ அமைப்புகளிடமும் ஒப்புதல் பெற்று, டெண்டர் கோரி, நிலம் கையகப்படுத்தி, உரிமங்களைப் பெற்று, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதனிடையே, மற்ற மாநிலங்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடும் நிலை உருவாகியுள்ளது.
அதேபோல, தற்போது உள்ள சென்னை விமான நிலையமும், போதுமான இடவசதியுடன் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஹைதராபாத் (5,500 ஏக்கர்), டில்லி (5,100 ஏக்கர்) பெங்களூரு (4,000 ஏக்கர்), நவி மும்பை (2,866 ஏக்கர்) என மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையம் வெறும் 1,300 ஏக்கர் நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்த சென்னை, தற்போது அதிகளவில் பயணிகளை கையாளுவதில் 5வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸி வேகள் மற்றும் ஏரோ பிரிட்ஜ்கள் இல்லாததால் 'கோட் எப்' விமான நிலையமாக வகைப்படுத்தப்படவில்லை, இதனால் பெரிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை உள்ளது.
எனவே, சென்னைக்கான 2வது விமான நிலையத்திற்குப் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்சிகள் வரலாம், போகலாம். அரசுகள் மாறும். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, மோசமான கட்டமைப்புகளுடன் கூடிய விமான நிலையம் இருந்து விடக் கூடாது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தேவைப்படும் 5,746 ஏக்கர் நிலத்தில், தமிழக அரசு 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக அண்மையில் கூறப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை வைத்து அரசு என்ன செய்யப் போகிறது?, இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
