ADDED : செப் 10, 2025 12:46 AM

கோவை: கோவையில், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டீ ரூ.15க்கும், காபி ரூ.20க்கும் விற்கப்பட்ட நிலையில், ஐந்து ரூபாய் உயர்த்துவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டீ ரூ.20, பிளாக் டீ ரூ.15, பார்சல் டீ ரூ. 40, காபி ரூ. 25, பிளாக் காபி ரூ. 20, பார்சல் காபி ரூ.55, லெமன் டீ ரூ. 20, கிரீன் டீ ரூ. 20 என உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்லிக்ஸ் ரூ.30, பூஸ்ட் ரூ. 30 என தலா 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சில பேக்கரிகள் ஸ்நாக்ஸ் விலையையும் உயர்த்தியுள்ளன. 15 ரூபாயாக இருந்த சிறிய ஜாம் பன் 20 ரூபாய், தேங்காய் பன் 20லிருந்து 25, கிரீம் பன் பெரியது 50லிருந்து 55, வெஜ் பப்ஸ் 20லிருந்து 22, எக் பப்ஸ் 22லிருந்து 25, மஸ்ரூம் மற்றும் பன்னீர் 25லிருந்து 30 என, 2 முதல் 5 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு வகையான பிஸ்கட் ஒரு கிலோ 440க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது, ''பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், டீ விலை 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை. வாடகை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் அதிகரித்துள்ளதால், சங்க உறுப்பினர்களிடம் ஆலோசித்து, டீ விலை உயர்த்தியுள்ளோம், '' என்றார்.
கோக், பெப்சிக்கு தடை?
அமெரிக்காவின் அநியாய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹோட்டல்களில் அமெரிக்க குளிர்பானங்கள் விற்கப்படாது என, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேபோல், கோவை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டதற்கு, ''சங்க நிர்வாகிகள் கூட்டம், நாளை (புதன்) நடக்கிறது. அதில், விவாதித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார் பொன்னுசாமி.
சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத பேக்கரி மற்றும் டீக்கடைகளில், விலை உயர்வு அமலுக்கு வரவில்லை. அவற்றில் 15 ரூபாய்க்கு டீ, 20 ரூபாய்க்கு காபி விற்கப்படுகிறது.