தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : நவ 03, 2025 02:51 PM

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (நவ.,03) அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் -வங்கதேசம்  கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ., 03) வலுவிழந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவம்பர் 8,9ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

