புழல் சிறைக்குள் கலவரத்தை துாண்டும் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிப்பு
புழல் சிறைக்குள் கலவரத்தை துாண்டும் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிப்பு
ADDED : ஜூலை 08, 2026 10:50 PM

சென்னை: புழல் சிறையில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கலவரத்தை துாண்ட முயற்சி செய்ததை, சிறை காவலர்கள் முறியடித்துள்ளனர்.
கடந்த 2013ல், தமிழகத்தில் அடுத்தடுத்து, பாஜ நிர்வாகிகள், ஹிந்து மத தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், சென்னை புழல் மத்திய சிறையில், உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வெளிநாடுகளில் உள்ள, தங்களின் கூட்டாளிகளுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக பேசி, சதி திட்டம் தீட்டி சிக்கினர். இதையடுத்து, புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அதே சிறையில், ரவுடி வெள்ளைக்காளி என்ற காளீஸ்வரனை, மற்றொரு ரவுடி லாலி மணிகண்டன் கும்பல், ஒரு கோடி ரூபாய் விலை பேசி கொலை செய்ய முயன்ற சம்பவமும் சமீபத்தில் அரங்கேறி உள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, புழல் சிறையில் கைதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்னையை திசை திருப்ப, போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள், சிறைக்குள் கலவரத்தை துாண்ட முயற்சி செய்தது பற்றி, சிறை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதிகரிகளுக்கு விஷயம் தெரிந்து விட்டதை அறிந்த போலீஸ் பக்ருதீன், ஆற்றாமையால் கத்தி கூச்சல் போட்டு, தங்கள் கூட்டாளிகளுக்கு மறைமுகமாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உயர் பாதுகாப்பு பிரிவில் அதிகாரிகள் சோதனை நடத்தி, கைதிகளை கடுமையாக எச்சரித்து, கலவரத்தை முறியடித்துள்ளனர்.
சிறை அதிகாரிகள் கூறுகையில், 'இலங்கை சிறையில் கலவரம் என்ற தகவல் கிடைத்த உடனேயே, மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தினோம். புழலில் நடக்க இருந்த கலவரமும் முறியடிக்கப்பட்டு விட்டது' என்றனர்.
