எல்லையில் மீண்டும் தாய்லாந்து தாக்குதல்; மோதலை நிறுத்த சர்வதேச சமூகத்திற்கு கம்போடியா அழைப்பு
எல்லையில் மீண்டும் தாய்லாந்து தாக்குதல்; மோதலை நிறுத்த சர்வதேச சமூகத்திற்கு கம்போடியா அழைப்பு
ADDED : டிச 20, 2025 09:56 PM

நமது நிருபர்
கம்போடியா எல்லையில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்களில்தாய்லாந்து மீண்டும் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகள் சர்வதேச விதிமுறைகளை கடுமையாக மீறுவதாகும். தாக்குதலை நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்போடியா தெரிவித்துள்ளது.
தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை துவங்கியது. ஒரு வாரமாக மோதல் நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பின்னர், தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தற்போது கம்போடியா எல்லையில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்களில், தாய்லாந்து மீண்டும் தாக்குதல்களை நடத்தி உள்ளது. கனரக பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக கம்போடியா புகார் கூறி வருகிறது.
கம்போடியாவின் தகவல் துறை அமைச்சர் நெத் பீக்ட்ரா கூறியதாவது: இந்த தாக்குதல் நடவடிக்கைகள் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களாகும். இந்த ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை கம்போடியா கடுமையாகக் கண்டிக்கிறது.
கம்போடியா மீதான தாய் ராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கம்போடியா அமைச்சர் தெரிவித்தார்.

