தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது!

நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது!

நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது!


ADDED : மார் 31, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது. ஆன்லைனிலும், நேரடியாகவும் இரு கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில், ஜூலை 17 முதல் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவிடலாம்.

நாட்டில், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சுதந்திரத்திற்கு பின் எட்டாவது முறையாக நாளை மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது.

பிரத்யேக இணையதளம்



இது குறித்து, தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்ஜய் குமார் நாராயணன் நேற்று கூறியதாவது: நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது. இந்த முறை பொதுமக்கள் தங்களை பற்றிய விபரங்களை, இணையதளம் வாயிலாக அவர்களாகவே பதிவு செய்யும், 'சுய விபரம்' என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ், அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உட்பட, 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சுய விபரங்களை பதிவு செய்வோருக்கு, 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பாளர், வீட்டிற்கு நேரில் வரும்போது, இந்த 16 இலக்க எண்ணை அவர்களிடம் வழங்கினால் போதும்.

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என, வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படும்.

பாதுகாப்பு



இந்த பிரமாண்ட பணி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, 33 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள், பின் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15ன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது. சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், 'என்கிரிப்ட்' செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுதும் இந்த முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாநிலம் வாரியாக, சுய விபர பதிவு மற்றும் கணக்கெடுப்பாளர் வீடு தேடி வரும் தேதிகள் மாறுபடுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 - 31 வரை பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆக., 1 - 30 வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 - 31 வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 - 30 வரையிலும் நடக்கிறது.

நேரடி கணக்கெடுப்பு



தலைநகர் டில்லியில், மாநகராட்சி ஒரு பகுதியாகவும், புதுடில்லி மற்றொரு பகுதியாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. அந்த வகையில், டில்லி மாநகராட்சி பகுதிகளில் சுய விபர பதிவு ஏப்., 1 - 15 வரையிலும், நேரடி கணக்கெடுப்பு ஏப்., 16 - மே 15 வரையிலும் நடக்கிறது. டில்லியின் பிற பகுதிகளில் சுய விபர பதிவு, மே 1 - 15 வரை நடக்கிறது. வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, மே 16 - ஜூன் 14 வரை நடக்கிறது.

Image 1556252


இனி இவங்களும் தம்பதி தான்!


மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கும் வகையில், 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் தற்கால சமூக மாற்றங்களை கருதி, அதற்கேற்ப சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில், 'லிவ் - இன்' முறையில் இணைந்து வாழும் தம்பதியரின் உறவு நிலை, அவர்களை திருமணம் முடித்த தம்பதியராகவே கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும். இது தவிர, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, உணவு முறை, பழக்க வழக்கம், சொந்த வீடு எனில், அதற்காக பயன்படுத்திய கட்டுமான பொருட்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்படும்.



33 கேள்விகள்!


கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வரும்போது, 33 கேள்விகளை கேட்பர். அதில் இடம் பெற்ற சில முக்கியமான கேள்விகள்: வீட்டு விலாசம், மாடி வீடா - கூரை வீடா, வீட்டின் தற்போதைய நிலை, எத்தனை பேர் வசிக்கின்றனர், வீடு யார் பெயரில் இருக்கிறது, குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா, பிற சமூகத்தை சேர்ந்தவரா என்ற கேள்விகள் அடங்கும். வீட்டில் உள்ள மொத்த அறைகள், திருமணமானவர்கள் எத்தனை பேர் வசிக்கின்றனர். குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிப்பறை, குளியலறை வசதிகள், டிவி, இணையதளம், கணினி வசதிகள், தரைவழி தொலைபேசி, மொபைல் போன், சைக்கிள், ஸ்கூட்டர், பைக், மொபட், கார், ஜீப், வேன் போன்ற வாகன வசதிகள் குறித்தும் கேள்விகள் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்காக மொபைல் எண் கேட்கப்படும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us