பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடு கூடாது; பிரிக்ஸ் அமைப்பு கூட்டறிக்கை
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடு கூடாது; பிரிக்ஸ் அமைப்பு கூட்டறிக்கை
ADDED : செப் 27, 2025 10:53 PM

நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும் என பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. நியூயார்க்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பு உறுப்பினராக உள்ள நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரிக்ஸ் கூட்டமைப்பின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதத்திற்கான நிதியுதவி உள்பட அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதத்தை முழு திறனுடன் எதிர்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை எந்தளவிலும் சகித்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும்.
அனைத்து பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் உலகளாவிய முயற்சிகள் சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் பொறுப்பேற்க வேண்டும். சர்வதேச சட்டத்தின்படி நீதிக்கு கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.