ADDED : அக் 06, 2025 07:11 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (அக் 05) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 வயது சிறுவன் போக்சோவில் கைது
பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை விளையாடுவதற்கு எனக்கூறி, வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்து, திருச்சி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
நெல்லை வாலிபர் சிக்கினார்
திருநெல்வேலியை அடுத்த பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் ஜெபஸ்தியான், 26. மும்பையில் வேலை செய்தவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் 2 வயது சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். ஜெபஸ்தியானை போக்சோவில் கைது செய்த மகளிர் போலீசார் சிறையிலடைத்தனர்.
முதியவர் போக்சோவில் கைது
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி நேற்று, தன் வீட்டின் மாடியில் மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் அங்கு வந்த, பக்கத்து வீட்டில் வசிக்கும் 61 வயது முதியவர் ஜெயராம், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்த புகாரில், செம்பியம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, ஜெயராமை கைது செய்தனர்.
தொழிலாளி மீது வழக்கு
ஈரோடு வீரப்பம்பாளையம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் கிருஷ்ணன், 26, கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி காதலித்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வந்தார்.
அப்போது வயது தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல குழுவினர் அறச்சலுார் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.