ADDED : ஜூலை 18, 2026 05:37 AM

ரெய்டில் சிக்கியது: ரொக்கமாக ரூ.13 லட்சம்; ஜிபே மூலம் ரூ.68 லட்சம்
லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாநிலம் முழுதும், 35 தாலுகா அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில், வேளச்சேரி, பெரம்பூர், கடலுார் மாவட்டம், சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சோதனை நடந்தது.
* திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 43,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
* மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ராஜரத்தினம், அவரது கார் ஓட்டுநர், இரண்டு வி.ஏ.ஓ.,க்களிடம், 42,750 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில், 22,600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நிலையில், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 34,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில், 32,200 ரூபாய், தென்காசி தாலுகா அலுவலகத்தில் 15,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒட்டுமொத்த சோதனையில், 13.78 லட்சம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியான ஜிபே மூலம் 68.32 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதில், கரூரில் அதிகபட்சமாக, 16.33 லட்சம் ரூபாய், திருச்சியில், 12.40 லட்சம் ரூபாய் ஜிபே மூலம் பெறப்பட்டுள்ளது.
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7.5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்
கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில் குழுவினர் நேற்று மாலை, 4:30 மணியளவில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலக அறைகள் மட்டுமின்றி, பார்க்கிங்கில் நின்று இருந்த அலுவலர்களின் வாகனங்களிலும் சோதனை செய்தனர். அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, பெண் அலுவலர்கள், பொதுமக்கள் முழுமையான சோதனைக்கு பின், 7:30 மணிக்கு வெளியில் அனுப்பப்பட்டனர்.லஞ்ச பணம் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக பெறப்பட்டதை கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனைத்து ஊழியர்களின், ஆன்லைன் செயலிகளை ஆய்வு செய்தனர். அதில், லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரொக்கமாக ரூ.5 ஆயிரம் சிக்கியது. இரவு, 10: 00 மணியை கடந்தும் சோதனை நடந்தது.
சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் அறையில் லஞ்சமாக பெற்ற வெளிநாட்டு மதுவகைகள் பறிமுதல்
சென்னை: சென்னை பட்டாளம் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில், சென்னை மாநகராட்சியின், திரு.வி.க., நகர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு சில தினங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் உதவி கமிஷனர் சொக்கலிங்கம் உட்பட, 82 பேரிடம் இருந்து, 41,790 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, திரு.வி.க., நகர் மண்டல அலுவலக செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிவர்மன், சரஸ்வதி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் உட்பட, 5 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடுமலை தாலுகா அலுவலகத்தில் ரெய்டு; 3 பேரிடம் ரூ.13 ஆயிரம் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சசிரேகா, கீதாலட்சுமி மற்றும் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாலை, 5:00 மணியளவில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பணியில் இருந்த அனைத்து அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும், அலுவலர்களின் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இரு அலுவலர்கள் மற்றும் ஒரு தனியார் என மூன்று பேரிடமிருந்து, கணக்கில் வராமல் வைத்திருந்த, 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரவு வரை விசாரணை நடந்து வந்தது.
