ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் விதிகள் மாற்றம்
ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் விதிகள் மாற்றம்
ADDED : டிச 17, 2025 05:05 PM

புதுடில்லி: ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சில குறிப்பிட்ட ரயில்களுக்கான பயண டிக்கெட் நிலை விதிகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது.
இந்த புதிய விதிகளால் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள், தங்கள் டிக்கெட் உறுதியாகவில்லை என்ற நிலையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் அவகாசம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.
புதிய முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் நேரங்கள்:
காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்கள்: இவற்றுக்கான முதல் முன்பதிவு பட்டியல், முந்தைய நாள் இரவு 8:00 மணிக்குத் தயார் செய்யப்படும்.
மதியம் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை புறப்படும் ரயில்கள்: இவற்றுக்கான முதல் முன்பதிவு பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்படும்.
முன்பு, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி கீழ்கண்ட வழிகளில் தங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் செக் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பகுதிக்குச் சென்று சரிபார்க்கலாம்.உங்கள் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை 139 அல்லது 5676747 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
எந்தவொரு போனிலும் 139 என்ற எண்ணை அழைத்து நிலையை அறியலாம்.

