ADDED : ஆக 29, 2026 10:28 AM

- நமது நிருபர்-
ஆகஸ்ட் (2026)
1. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டில்லிக்கு வந்த, 'ஏர் இந்தியா' விமானம் நடுவானில் குலுங்கியது. விமானம் சில நொடிகளில் 300 அடி கீழே செங்குத்தாக சரிந்ததில் 24 பேர் காயமடைந்தனர். பின்னர் விமானம் டில்லியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
2. கோல்கட்டாவிலிருந்து சென்னை செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையான தொழில்நுட்பக் கோளாறால் 6 மணி நேரம் தாமதமானது. விமான நிறுவனம் பயணிகளுக்கு முறையான உணவோ, தகவலோ வழங்காததால் பயணிகள் கொல்கத்தா விமான நிலையத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மே (2026)
3. டில்லியில் இருந்து 230 பயணிகளுடன் சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீன வான்வெளியில் இருந்து டில்லிக்குத் திரும்பியது.
4. பெங்களூருவில் இருந்து டில்லி நோக்கி 171 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா ஏ320 விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததை அடுத்து, விமானி உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
மார்ச் (2026)
5. டில்லியில் இருந்து லண்டன் ஹீத்ரோ சென்ற ஏர் இந்தியாவின்A350-900 (விமானம் AI-111) சவுதி அரேபியா வான்பரப்பில் பறந்தபோது திடீர் அதிர்வுகள் மற்றும் விசித்திரமான சத்தங்கள் ஏற்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக 7 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு விமானம் மீண்டும் டில்லிக்கே திரும்பி வந்தது.
6. நியூயார்க்கில் இருந்து டில்லி நோக்கி 300 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா ஏ350 விமானத்தில் (AI102) நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அயர்லாந்தின் ஷானன் விமான நிலையத்திற்கு விமானம் அவசரமாகத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.
அக்டோபர் (2025)
7. மும்பையிலிருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI 191) நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உடனடியாகப் பயணிகளுடன் மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆகஸ்ட் (2025)
8. திருவனந்தபுரத்திலிருந்து டில்லி நோக்கி 150 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாகச் சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.
ஜூலை (2025)
9. கோழிக்கோட்டிலிருந்து தோஹா நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், டேக்-ஆப் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் கேபின் ஏர் கண்டிஷனிங் (AC) அமைப்பில் பழுது ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அபாயம் தவிர்ப்பதற்காக 2 மணி நேரத்திற்கு பின் விமானம் மீண்டும் கோழிக்கோட்டிலேயே தரையிறக்கப்பட்டது.
ஜூன் (2025)
10. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உள்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.விமானம் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இதுபோல கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே சிறிய சிறிய ஏராளமான தொழில்நுட்ப கோளாறுகளை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் சந்தித்து, பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
