அதிகாரத்தை கைவிடாவிட்டால் பேரழிவு: ஹமாஸூக்கு டிரம்ப் எச்சரிக்கை
அதிகாரத்தை கைவிடாவிட்டால் பேரழிவு: ஹமாஸூக்கு டிரம்ப் எச்சரிக்கை
ADDED : அக் 05, 2025 11:50 PM

வாஷிங்டன்: ''காசாவில் அதிகாரத்தை விட்டு கொடுக்காவிட்டால் ஹமாஸ் பேரழிவை சந்திக்கும்; அந்த அமைப்பு முழுதாக அழிக்கப்படும்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக, 20 அம்ச திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார்.
'ஹமாஸ் அமைப்பு அதிகாரத்தை விட்டுத் தர வேண்டும், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், காசாவின் எதிர்காலத்துக்காக புதிய நிர்வாகம் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
மேலும், இஸ்ரேலுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஹமாஸ் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி, அமெரிக்க நேரப்படி, ஞாயிறு மாலை 6:00 மணி வரை கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவதற்குள் மீண்டும் ஹமாஸ் அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
என் அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஹமாஸ் அமைப்புக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தருகிறேன். காசாவில் அமைதியை ஏற்படுத்த ஹமாஸ் உண்மையிலேயே விரும்புகிறதா என்பதை அறிய விரும்புகிறேன். இஸ்ரேல் பிணைக் கைதிகளை உடனடியாக ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.
பிணைக் கைதிகளை விடுவிக்கும் நாளாக அதை அறிவிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை எப்படியாவது அங்கு அமைதி நிலவ வேண்டும்.
காசா மீதான கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் ஹமாஸ் கைவிட வேண்டும். இல்லையெனில் அந்த அமைப்பு முழுதாக அழிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.