சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்
சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்
UPDATED : மே 11, 2026 05:13 PM
ADDED : மே 11, 2026 12:08 PM

சென்னை; தமிழக சட்டசபை சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (மே 12) வெளியாகிறது..
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று சட்டசபை கூட்டம் நடந்தது. அவர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழலில் நாளை (மே 12) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
இதில். சபாநாயகர் வேட்பாளராக ஆளும் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று மாலையுடன் வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்தது. வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, அவர் போட்டியின்றி தேர்வாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறைப்படி நாளை அறிவிக்கப்படுகிறது. இதேபோல, துணை சபாநாயகராக துறையூர் தவெக எம்எல்ஏ ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பும் நாளை வெளியாகிறது.
