ADDED : மே 07, 2026 02:15 AM

சென்னை: சிறப்பு பணியாக, தமிழக காவல் துறையின் உளவுத்துறைக்கு, அரவிந்த் மற்றும் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி என, இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலுார் மாவட்ட எஸ்.பி.,யாக இருப்பவர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி. இவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த, 2017ம் ஆண்டு, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில், உதவி எஸ்.பி.,யாக பணியை தொடங்கினார். கடந்த, 2021ல், கவர்னர் மாளிகை முகாம் அலுவலக உதவி எஸ்.பி.,யாகவும் பணிபுரிந்தார்.
தற்போது, டி.ஜி.பி., அலுவலகத்தில் சிறப்பு பணியாக உளவுத்துறை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருப்பவர் அரவிந்த்.
இவர், சென்னை மாநகர போலீசில் நுண்ணறிவு பிரிவு எஸ்.பி., மற்றும் தென்காசி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார்.
தற்போது இவரும், டி.ஜி.பி., அலுவலகத்தில், சிறப்பு பணியாக உளவுத்துறை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் பிறப்பித்துள்ளார்.
மேலும், அரியலுார் மாவட்ட எஸ்.பி., பொறுப்பை, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., பிரபாகரும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., பொறுப்பை, விழுப்புரம் எஸ்.பி., சாய் பிரனீத்தும் கூடுதலாக கவனிப்பர் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
