UPDATED : ஏப் 16, 2026 04:43 AM
ADDED : ஏப் 16, 2026 12:58 AM

வாஷிங்டன்: அமெரிக்கா -- ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் நிலையில், புதிய அமைதி பேச்சுக்கு அமெரிக்கா இரு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் -இஸ்ரேல் இணைந்து பிப்., 28ல் பெரிய தாக்கு தலைத் தொடங்கின.
போர் நிறுத்தம்
பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த ஒரு மாதமாக மேற்காசியா முழுதும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியது.
இதற்கிடையே, 'ஈரான் நாகரிகத்தையே முற்றிலுமாக அழிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்தார்; அதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தார்.
அந்த காலக்கெடு முடிவதற்குள் போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதித்தது. கடந்த 8ம் தேதி இரண்டு வார போர் நிறுத்தம் அமலானது. அதன்பின் அமெரிக்கா- - ஈரான் இடையேயான அமைதிப்பேச்சு, பாகிஸ்தானில் 21 மணி நேரம் நடந்தது.
அதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாததால், பேச்சு தோல்வியில் முடிந்தது. இதற்காக இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டின. இதற்கு, ஈரானின் அணு செறிவூட்டல் தொடர்பான நிபந்தனைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
அடுத்த சுற்று பேச்சு
இதை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்குள் போர்க் கப்பலை அனுப்பி, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால், அவர்களால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
இந்தச் சூழலில் அடுத்த சுற்று பேச்சு, அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் நடைபெறலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு இரு நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார். ஒன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை அனுமதிப்பது; இரண்டாவது, பேச்சு நடத்தும் ஈரான் குழுவுக்கு அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கு முழு அதிகாரம் வழங்குவது.
இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இரண்டாவது சுற்று பேச்சு பாகிஸ்தானில் தொடரும் என டிரம்ப் கூறியுள்ளார்.
போர் விரைவில் முடியும்!
தற்போது, ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இப்போதே நாங்கள் வெளியேறினால் கூட ஈரான் தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, 20 ஆண்டுகள் ஆகும். அதனாலேயே அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றனர்.
- டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்
