கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு; கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு; கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ADDED : ஆக 30, 2026 06:59 PM

பெங்களூரு: கர்நாடகாவில் நடந்த கால்நடை மருத்துவர்கள் தேர்வு முறைகேடு வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் கங்குவார் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கால்நடை பராமரிப்பு துறையில், 400 கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரியில் தேர்வு நடத்தியது.
தேர்வர்களிடம் பணம் பெற்று கொண்டு, ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு செய்ததாக, தேர்வாணைய கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் கங்குவார் மீது புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக, சி.ஐ.டி., விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையும் விசாரிக்கிறது. இது தொடர்பாக, கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் உள்ளிட்டோர், சி.ஐ.டி., விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையில், ஞானேந்திர குமார் வீட்டிலும், அமலாக்கத் துறை, சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறி, 15 நாட்கள் விடுப்பில் சென்ற ஞானேந்திர குமார் மாயமானார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரது வீட்டில் அமலாக்கத் துறை, சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' ஒட்டி சென்றனர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி சி.ஐ.டி., விசாரணைக்கு ஞானேந்திர குமார் ஆஜரானார். பல்வேறு கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே பெரும்பாலும் பதிலளித்தார். முதல் நாள் அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்திய பின், மறுநாள் ஆஜராகும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோதும், பல கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே கூறியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும், அவர் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதன் அடிப்படையிலும், அவரை சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
