ADDED : செப் 07, 2025 06:44 PM

புதுடில்லி: நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு, சம்பளம் எதுவும் கிடையாது; ஆனால் சலுகைகள் ஏராளமாக இருக்கின்றன.
உடல் நிலையை காரணம் காட்டி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் செப்.,9ல் நடக்கிறது. இதில், ஆளும் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.துணை ஜனாதிபதி பதவியானது, அரசியல் சட்ட ரீதியாக நாட்டின் இரண்டாவது உயரிய பதவியாகும். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரு பதவி இது மட்டும் தான்.ஆனால், ராஜ்யசபாவின் தலைவராக பணியாற்றுவதற்காக, துணை ஜனாதிபதியாக இருப்பவருக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
இது தவிர சலுகைகளும் நிறைய உண்டு. இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம், பாதுகாப்பு வசதி, பணியாளர்கள் என பலப்பல வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படும். துணை ஜனாதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு (முன்னாள் துணை ஜனாதிபதிக்கு), மாதம் 2 லட்சம் ரூபாய் பென்சன் கிடைக்கும். டைப் 8 என்ற தரத்தில் பங்களாவும் உண்டு. தனிச்செயலாளர்கள் இருவர், தனி உதவியாளர், மருத்துவர், நர்சிங் அதிகாரி, நான்கு பணியாளர்களும் அவரது அலுவலகத்தில் பணியில் இருப்பர்.
முன்னாள் துணை ஜனாதிபதி இறந்து விட்டாலும், அவரது மனைவிக்கு ஆயுட்காலம் முழுவதும் தங்குவதற்கு டைப் 7 பங்களா ஒதுக்கீடு செய்யப்படும் என்கின்றனர், அதிகாரிகள்.