போதைப்பொருள் கடத்திய வெனிசுலா கப்பல் தகர்ப்பு; அமெரிக்க தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு
போதைப்பொருள் கடத்திய வெனிசுலா கப்பல் தகர்ப்பு; அமெரிக்க தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு
ADDED : அக் 04, 2025 07:51 AM

நியூயார்க்: வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப் படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப் பொருட்களுடன் சென்ற இரண்டு கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் வீடியோவை சமூக வலைதளத்தில் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு கப்பல் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்கப் படைகளும் பாதிக்கப்படவில்லை. வெனிசுலா கடற்கரையிலிருந்து சர்வதேச கடல் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பல் கணிசமான அளவு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றது.
நமது மக்களுக்கு விஷம் கொடுக்க அமெரிக்காவிற்குச் சென்றது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தக் கப்பல் போதைப்பொருள் கடத்துவதாகவும், அதில் இருந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல் என்பதை எங்கள் உளவுத்துறை உறுதிப்படுத்தியது. வெனிசுலா நாட்டினர் போதைப்பொருள் கடத்துவதை நிறுத்தும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.