விழுப்புரத்தில் அதிர்ச்சி: மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்
விழுப்புரத்தில் அதிர்ச்சி: மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்
ADDED : அக் 19, 2025 10:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் மணல் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது உண்டு. இதையறிந்த போலீசார், தொடர்ந்து கடற்கரையோர கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இரவு நேரங்களில் ரோந்து பணிகளையம் அவர்கள் முடுக்கி விட்டிருந்தனர். கடந்த மாதம் பிடாகம் பகுதியைச் சேர்ந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட சுதாகர் என்பவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந் நிலையில், சுதாகர் தென் பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் உலவி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ குணசேகரன் பிடாகம் கிராமத்திற்கு சென்று மறைவான இடத்தில் பதுங்கி இருந்த சுதாகரை பிடிக்க எத்தனிக்கிறார்.
அப்போது, சுதாகர், எஸ்ஐ குணசேகரனை மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதம் கொண்டு சரமாரியாகி தாக்கவிட்டு தப்பிச் செல்கிறான். கழுத்தில் விழுந்த ஆழமான காயம் காரணமாக எஸ்ஐ குணசேகரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுதாகர், எஸ்ஐ குணசேகரன் வைத்திருந்த வாக்கி டாக்கியையும் திருடிக் கொண்டு அங்கிருந்து மாயமாகிறான். மீட்கப்பட்ட குணசேகரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுதாகரை பிடிக்க மாவட்ட எஸ்பி சரவணன், 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் தப்பியோடிய சுதாகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.