கரூரில் திட்டமிட்டு பிரச்சினை உருவாக்கப்பட்டதா..?இபிஎஸ் சந்தேகம்
கரூரில் திட்டமிட்டு பிரச்சினை உருவாக்கப்பட்டதா..?இபிஎஸ் சந்தேகம்
ADDED : அக் 08, 2025 08:48 PM

திருச்செங்கோடு : '' கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டம் சரியான முறையில் நடக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுபயணத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அவர் பேசியதாவது: கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. இனிமேல் மருத்துவமனையில் மருத்துவ பயனாளிகள் என்று சொல்ல வேண்டுமாம். நோயாளி என்று சொல்லக்கூடாது. பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம்?
ஸ்டாலின் அவர்களே, இரண்டு பெயரை மட்டும் தயவுசெய்து மாற்றி விடாதீர்கள். அப்பா, அம்மா பெயரை மாற்றிவிடாதீர்கள். விட்டால் அதையும் மாற்றிவிடுவார். எல்லாவற்றுக்கு பெயர் மாற்றம், இரண்டாவது பெயர் வைப்பார், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.
கோவையில் நாளை பாலம் திறக்கிறார்கள், தமிழ்நாட்டிலேயே 10 கிலோமீட்டர் நீளமான பாலம். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. பாலத்துக்கு, நல்ல பெயர் வைங்க, உங்க அப்பா பெயர் மட்டும் வைக்காதீர்கள். எங்க பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொடர்ந்து போராடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அதிமுக அரணாகவும், துணையாகவும் நிற்கும். அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் துன்பப்படவில்லை, அவர்களை கட்டாயப்படுத்தி வரவைக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்த சில மாதங்கள் கொரோனா இருந்தது அப்போது ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை கட்டாயப்படுத்தி வரச்சொல்லியதால் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால் எதில் சூப்பர் முதல்வர்..? பொய் பேசுவதில், கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள்.
இப்பகுதியில் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம், ஸ்டாலினை யாராவது போய் பார்க்க முடியுமா? ஸ்டாலின், அவரது குடும்பம் மட்டுமே வாழ வேண்டுமென்று நினைப்பார்கள்.
இப்பகுதியில் திமுக கவுன்சிலர் கள்ளச்சாரயம் காய்ச்சி, போலி மதுபானம் காய்ச்சி, அதை அவரது அரசே கண்டுபிடித்தது. திமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம். அதற்கு திமுக நிர்வாகிகள் துணைபோகிறார்கள். கஞ்சா விற்பவர்களும் திமுக நிர்வாகிகள், அதனால் காவல்துறையால் கட்டுபப்டுத்த முடியலை, அதிமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை முழுமையாக தடை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.